சென்னை:
சென்னை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகள் இல்லை என்று தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் நேற்று வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இவர் தவறான தகவல் வெளியிட்டு உள்ளார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை சார்பில் வரதராஜன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் க்ரைம்’ போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வரதராஜன் மீது நேற்றிரவு வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக விசாரணை தொடங்கியது. அவர் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.