செய்திகள்

வேலூர் கொணவட்டம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தடியடி

வேலூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, ஏற்பட்ட கலவரத்தில் பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

வேலூர்:

வேலூரில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. வேலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மாங்காய் மண்டி வரை வந்து அங்கிருந்து வலதுபுற சாலைக்கு திரும்பி அணுகு சாலைக்கு சென்று பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரி ஏரிக்கு சென்றது.

ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கொணவட்டம் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் சேண்பாக்கம், முள்ளிபாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கொணவட்டம் வழியாக சென்றது. அப்போது சேண்பாக்கத்தை சேர்ந்த ஒரு சிலையுடன் சென்றவர்கள் பாடல்களை ஒலிக்க செய்தனர். மசூதி அருகே சென்ற போது போலீசார் அவர்களிடம் பாடல்களை ஒலிக்கக் கூடாது என்றனர்.

அப்போது போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் வாகனங்களை வேகமாக அங்கிருந்து நகர்த்துவதில் குறியாக இருந்தனர்.

பொதுமக்களையும், இந்து முன்னணியினரையும் விரட்டினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் திடீரென பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.

அப்போது பெண்கள் மீதும் தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.