செய்திகள்

துபாயில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 4½ கிலோ தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் 4½ கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாக கேரள பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ஆலந்தூர்:

துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கேரளாவைச் சேர்ந்த ஆதிராவ் வர்கீத், ஜெசிவர்கீத் ஆகியோர் உடலில் மறைத்து வைத்து 4½ கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.35 கோடியாகும்.

இது தொடர்பாக தங்கம் கடத்திய பெண்கள் கூறும்போது, “துபாயில் இருந்து வேறு நபர்கள் விமான இருக்கையின் கீழே மறைத்து தங்கத்தை கடத்தி வந்தனர். நாங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து அந்த நபர்களிடம் தங்கத்தை வாங்கி எடுத்து வந்தோம்” என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர்கள் யார்? யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.