செய்திகள்

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 3 பேர் கைது

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 3 பேரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதிகளிடம் இருந்து பணத்தை பெற்று, அதை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, கடந்த 3-ந்தேதி தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் காஷ்மீர் அரியானா மற்றும் டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத தலைவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கோடிக்கணக்கிலான பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இதன் தொடர்ச்சியாக நேற்று காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானியின் மருமகன் முகமது அல்தாப் ஷா, அமலகம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஆயிஷ் அக்பர் மற்றும் மெக்ராஜூதின் கல்வால் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் இன்று டெல்லியில் தேசிய புலனாய்வு குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி அதிகாரிகள் சம்மன் அளித்துவிட்டு சென்றனர். இதையடுத்து, பிரிவினைவாத தலைவர்கள் 3 பேரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT