சென்னை:
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. மெரினாவில் ஜனவரி 20-ந்தேதியன்று லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தியபோது, சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் மாயழகு போலீஸ் சீருடையுடன் மைக்கை பிடித்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசினார்.
அவரது பேச்சு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அவர் சீருடை அணிந்தபடி பேசியதால், அதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் மாயழகு மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு பதவி உயர்விலும், அடுத்தக்கட்ட சம்பள உயர்விலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
மாயழகு மீதான இந்த நடவடிக்கைக்கு எதிராக ‘வாட்ஸ்-அப்’பில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு உள்ளனர்.