புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,717 கோடி மோசடி செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவை விசாரித்து வருகிறது.
இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி மற்றும் அவரது மனைவி அமீ மோடி, சகோதரர் நிஷால், உறவினர் மெகுல் சோக்ஷி ஆகிய 4 பேர் வெளிநாடு தப்பிவிட்டனர். அவர்களை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவி மூலம் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், நிரவ் மோடி நிறுவனத்தினர் பலர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக மேலும் நான்கு பேரை சி.பி.ஐ. நேற்று கைது செய்துள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மற்றும் நிரவ் மோடியின் ஆடிட்டர் சஞ்சய் ராம்பியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதோடு அவரது உறவினர் மெகுல் சோக்ஷிக்கு கீதாஞ்சலி நிறுவனத்தின் இயக்குனர் அனியாத் சிவ் ராமன் நாயரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PNBscam #CBI #NiravModi #tamilnews