செய்திகள்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் கஹான் அப்பாஸி தேர்வு

நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ததையடுத்து பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரியாக இருக்கும் ஷாகித் கஹான் அப்பாஸி நியமிக்கப்பட்டார்.

மாலை மலர்

நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ததையடுத்து பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரியாக இருக்கும் ஷாகித் கஹான் அப்பாஸி நியமிக்கப்பட்டார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இதனையடுத்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மையமாக வைத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நவாஸ் ஷெரீப் தலைமையில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.