பிரதமர் மோடி 
செய்திகள்

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில் , தாய்லாந்தில் நடைபெற உள்ள 3 முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும்  2-ம் தேதி அங்கு செல்கிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செயலாளர் விஜய் தாகூர் சிங் கூறுகையில்,

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 2-ம் தேதி முதல் 4 ம் தேதி வரை பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அங்கு நடைபெற உள்ள, 16-வது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்)- இந்தியா மாநாடு, 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை அமைப்பில்  புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.