ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்று வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதேபோல், பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளருக்கு போட்டியாக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் ஆயத்தமாகி வருகின்றன.
எனவே, ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை தெரியவில்லை. அதேசமயம், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்வதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளுடன் பா.ஜ.க. ஆலோசனை நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கு, பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
“ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகள் அரசியல் அல்லாத அரசியலமைப்பு பதவிகள். எனவே அப்பதவிகளுக்கான தேர்தலில் ஒருமித்த கருத்து உருவாவதற்கு பிரதமர் ஆலோசனையைத் தொடங்குவது வழக்கம். பிரதமர் ஆலோசனையை தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் அவ்வாறு செய்வதை விரும்பாவிட்டால், வாஜ்பாய் 2002ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆலோசனையை தொடங்கியதுடன், டாக்டர் அப்துல் கலாம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை நினைவு படுத்த விரும்புகிறோம்.