செய்திகள்

வாரணாசியில் கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார் பிரதமர் மோடி

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் மோடி கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார். #LokSabhaElections2019 #Modi

மாலை மலர்

லக்னோ:

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

இதையொட்டி, பாஜக சார்பில் வாரணாசியில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இதில் பங்கேற்றார்.

தொண்டர்கள் சூழ பிரதமர் மோடி சாலையில் ஜீப்பில் நின்றபடி தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை அடைந்தார். இதையடுத்து கங்கை நதியை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு கங்கா ஆரத்தி செய்து வழிபாடு நடத்தினார்.  

முன்னதாக, வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Modi