செய்திகள்

பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் மாக்ரான் சந்திப்பு

அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாரீஸ்: 

அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா பயணத்தை முடித்து நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்சு புறப்பட்ட மோடி, அவரது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் பல திட்டங்கள் மற்றும் பயனுள்ள கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இது இந்தியா - ரஷியா நட்புக்கு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரான்ஸ் பயணம் குறித்து, இந்தியாவுடனான முக்கிய நட்பு நாடான பிரான்சுடனான உறவை மேம்படுத்துவதற்காக வந்துள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரான்சில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானை இன்று சந்தித்த மோடி அவருடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

பாதுகாப்பு, அணுஆயுதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நகர்ப்புற வளர்ச்சி, ரயில்வே உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பிரான்ஸ், இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் 9-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.