பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதும் முதன் முதலில் அண்டை நாட்டுக்குத்தான் சென்றார். அதே போன்று இந்த தடவையும் பக்கத்து நாட்டுக்கே செல்ல வேண்டும் என்ற முடிவின்படி அவர் மாலத்தீவு செல்கிறார்.
சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. அது தேர்தலில் ஓய்ந்த பிறகு தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கையில் சிலமணி நேரம் மட்டுமே மோடி தங்கி இருப்பார்.
அப்போது அவர் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே இருவரையும் சந்தித்து பேசுவார். இது தவிர இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார்.