செய்திகள்

பஞ்சாப் ரெயில் விபத்து - மத்திய அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி

பஞ்சாப்பின் அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகே சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்  என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப்பில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident

SCROLL FOR NEXT