பிரதமர் மோடி 
செய்திகள்

முப்படை தளபதியாக பொறுப்பேற்ற பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

முப்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பிபின் ராவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ராணுவப்படை , விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் நேரத்தில், முப்படை தளபதி பதவியை உருவாக்க மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.

ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நேற்று ஓய்வுபெற்ற பிபின் ராவத், முப்படைகளின் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று பொறுப்பேற்றார். அப்போது, மூன்று பாதுகாப்பு படைகளும் ஒரு அணியாக செயல்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

புதிய ஆண்டு மற்றும் புதிய தசாப்தம் தொடங்கும்போது இந்தியா தனது முதல் முப்படை தளபதியான பிபின் ராவத்தை பெறுகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

அவர் ஒரு சிறந்த அதிகாரி. அவர் மிகுந்த ஆர்வத்துடன் இந்தியாவுக்கு சேவை செய்தவர்.  முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்பது ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தமாகும். போர்க்களத்தில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள இந்த சீர்திருத்தம் உதவியாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.