பிரதமர் மோடி 
செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகள், சுகாதாரத்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் அதிக ஒற்றை நாள் மீட்டெடுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 45 லட்சம் (44,97,867) ஆகும். இதன் விளைவாக மீட்பு விகிதம் 80.86 சதவீதத்தை எட்டியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 75,083 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,053 இறப்புகள் பதிவாகி உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு இப்போது 55,62,664 ஆக உள்ளது, இதில்  சிகிச்சையில் 9,75,861 பேர் உள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 88,935 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள் மற்றும் சுகாதார மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதல் மந்திரிகள் மற்றும் சுகாதாரத்துறை மந்திரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.