செய்திகள்

சிம்லா வீதியில் காபி குடித்த பிரதமருடன் செல்பி எடுக்க பொதுமக்கள் ஆர்வம்

இமாச்சலப்பிரதேசம் மாநில முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும் வழியில் சிம்லா நகரின் வீதியில் காபி குடித்த பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். #Modi #Simla #IndianCoffeehouse

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் 10 மந்திரிகளுடன் இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு முடிந்து, டெல்லி செல்வதற்காக சிம்லா நகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை நோக்கி பிரதமரின் கார் சென்றது. அங்குள்ள மால் சாலை வழியாக சென்றபோது சாலையின் ஓரமுள்ள இந்தியன் காபி ஹவுஸ் அருகே காரை நிறுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பிரதமராவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், கட்சி பணிகள் தொடர்பாக சிம்லா நகருக்கு வந்தபோது அந்த காபி கடையில் நேரத்தை செலவழித்து பழக்கப்பட்ட மோடி, அங்கிருந்து காபி வரவழைத்து சாலையில் நின்றபடி அருந்த தொடங்கினார். அப்போது, பாதுகாவலர்களையும் மீறி பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துகொள்ள ஆர்வம் காட்டினர். #Modi #Simla #IndianCoffeehouse