செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமே போர், எந்த மதத்துக்கும் எதிராக அல்ல - பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமே நாங்கள் போர் புரிந்து வருகிறோம். எந்த மதத்துக்கும் எதிராக அல்ல என தெரிவித்துள்ளார். #JordanKing #modi

மாலை மலர்

புதுடெல்லி:

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும், தனது சுற்றுப்பயணத்தில் டெல்லி ஐ.ஐ.டி, இந்தியா - ஜோர்டான் பொருளாதார கூட்டு கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதற்கிடையே, இந்திய இஸ்லாமிய மையம் சார்பில் டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும், பிரதமர் மோடியும் பேசினர்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், 'நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமே போர் புரிந்து வருகிறோம். எந்த மதத்துக்கும் எதிராக நாங்கள் போர் புரிவது இல்லை. ஆனால், குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானது எனற கண்ணோட்டத்தில் தான் எங்களது நடவடிக்கைகள் பார்க்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் உதவிகரமாக இருப்போம்’ என தெரிவித்துள்ளார். 

கடந்த 2006-ம் ஆண்டு தனது மனைவியுடன் மன்னர் அப்துல்லா இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#JordanKing  #modi #TamilNews