முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ்வுடன் பிரதமர் மோடி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் 
செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் சுஷ்மா சுவராஜ் - பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 7 முறை மத்திய மந்திரியாக அவர் இருந்துள்ளார். இந்திராகாந்திக்கு பிறகு 2-வது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் ஆவார்.

உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை  பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துவதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர், இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.