செய்திகள்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் புதின் உடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்துள்ளார்.

மாலை மலர்

மாஸ்கோ:

இந்திய பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, இன்று ரஷ்யா சென்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இரு தலைவர்களும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

புதினிடம் பேசிய மோடி, “சர்வதேச உறவுகளில் வழக்கமாக ஏற்ற இறங்கங்கள் இருக்கும். ஆனால், ரஷ்யா உடனான உறவில் அப்படி எப்போதும் இருந்ததில்லை. ராஷ்யாவும், இந்தியாவும் பலன்கள் மற்றும் மகிழ்ச்சியில் நம்பிக்கை வைத்துள்ளது. இரு நாடுகள் மற்றும் மக்களிடையே உள்ள உறவில் சிறப்பு தன்மை உள்ளது.

நாட்டிற்காக தியாகங்களை செய்த குடும்பத்தை சேர்ந்த தலைவர் நீங்கள். உங்கள் சகோதரர் தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்துள்ளார்.” என்றார்.

இதனையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையம் விவகாரம் உள்ளிட்ட 12 முக்கிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக, இரண்டாம் உலகப் போரின்போது உயிர்நீத்தவர்களின் நினைவிடமான பிஸ்கர்யோவ்ஸ்கொயே நினைவு கல்லறையில் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.