அம்மான்:
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாசை சந்தித்து பேசினார்.
நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜோர்டான் சென்ற அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் ஹுசைனை சந்தித்து பேசினார்.
அங்கிருந்து இன்று பாலஸ்தீனம் நாட்டுக்கு வந்தார். அவரை பாலஸ்தீனம் நாட்டு பிரதமர் ரமி ஹமதல்லா வரவேற்றார். அங்கிருந்து முன்னாள் பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபட்டின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாசை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும், இந்தியா - பாலஸ்தீனம் உறவுகள் குறித்து பேசுகின்றனர். பின்னர் சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். அவருடன் மதிய உணவு சாப்பிடும் மோடி, மாலை பாலஸ்தீனத்தில் இருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறார்.
துபாயில் நாளை நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசுகிறார்.
அடுத்த நாளான 12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார். #PMModi #MiddleEastVisit #tamilnews