புதுடெல்லி:
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா பின் ஹுசைனை சந்தித்து பேசினார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட மோடி முதலில் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். அம்மான் விமானநிலையம் வந்த மோடியை ஜோர்டான் பிரதமர் ஹனி அல்-முல்கி மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் ஹுசைனை சந்தித்து பேசினார்.
அங்கிருந்து பாலஸ்தீனம் நாட்டுக்கு செல்கிறார். நாளை பாலஸ்தீனம் பிரதமர் ரமி ஹம்தல்லாவை சந்தித்து பேசுகிறார். நாளை மாலையே அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறார்.
துபாயில் 11-ம் தேதி நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசுகிறார்.
12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார். #PMModi #MiddleEastVisit #tamilnews