புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகள் தலைமைக்கு பிரதமர் மோடி முன்மொழிந்தார். பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆலோசனையில் ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் சார்பில் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிஸ்ரா இதில் பங்கேற்றார்.