இந்தியா-சீனா அதிகாரிகள் இன்று கோவளம் தாஜ் ஓட்டலில் சந்தித்து பேசிய பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த ஓட்டல் அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
அந்த கண்காட்சியில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை கண்காட்சியும் இடம் பெற்று இருந்தது. பட்டு சேலைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? என்பது செய்முறை விளக்கமாக சீன அதிபருக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
நெசவாளி ஒருவர் பட்டு துணியை நெய்து காட்டினார். அதை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறகு ஜின்பிங், மோடி இருவரின் உருவம் பொறித்த பட்டு சால்வையை சீன அதிபருக்கு காட்டினார்கள்.
ஜி ஜின்பிங் தனது உருவம் பொறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
அந்த பட்டு சால்வையை சீன அதிபருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பிரதமர் மோடியின் உருவம் பதித்த பீங்கான் தட்டு ஒன்றையும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.