புதுடெல்லி:
2018-19-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண்மை, ரெயில்வே போன்ற துறைகளில் பல திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். வருமான வரி உச்சரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் அறிவித்தார்.
பொது பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்ததாவது:-
நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் புதிய இந்தியாவை வலுப்படுத்தும் விதமாக உள்ளது. இதனால், விவசாயிகள் அச்சம் போக்கப்பட்டுள்ளது. அனைத்து துறையினருக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.