செய்திகள்

இந்தோனேசிய விமான விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi

மாலை மலர்

ஜகர்தா:

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

“லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் சென்றனர். அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா (31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான பலத்தையும், தைரியத்தையும் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi