செய்திகள்

ஆந்திரா சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் இரங்கல்

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்து பற்றி கேள்விப்பட்ட முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியானதை பற்றி அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.