பிரதமர் மோடி 
செய்திகள்

புனேயில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

புனேயில் நேற்று 2-வது நாளாக நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

மாலை மலர்

புனே:

மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான 3 நாள் மாநாடு மராட்டிய மாநிலம் புனே நகரின் பாஷன் பகுதியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார்.

மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி புனே வந்தார். விமான நிலையத்தில் அவரை மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வரவேற்றார்.

2-வது நாளாக நேற்று நடந்த மாநாட்டில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து பேசினார்.

மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக புனே கவர்னர் மாளிகையில் நடந்த ஆயுதப்படைகளின் கொடிநாள் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார்.

அப்போது, 2016-ம் ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மராட்டியத்தை சேர்ந்த மேஜரின் குடும்பத்தினரை மோடி சந்தித்தார்.

இதற்கிடையே கொடி நாள் தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டார். அதில், ‘கொடி நாளில் நமது படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தைரியத்தை வணங்குகிறோம். நமது படைகளின் நலனுக்காக பங்களிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.