செய்திகள்

மதுரை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை கள்ளந்திரி அருகிலுள்ள தொப்புளாம் பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் மகள் பிரியதர்ஷினி (வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக பிரியதர்ஷினியின் தாயார் மீனா அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வி.நடுவூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவர் சம்பவத்தன்று மாலை ஆட்டுப்பட்டியில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் சுந்தர்ராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக சுந்தர்ராஜ் மகன் சுந்தர பாண்டி விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் அய்யணன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.