செய்திகள்

ஈத்தாமொழியில் பிளஸ்-1 மாணவி கடத்தல்

ஈத்தாமொழியில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றார்.ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்கு சென்றனர். அங்கு மாணவியை காணவில்லை.

இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 29-ந்தேதி பள்ளிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. ஊரில் விசாரித்த போது எனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது23) என்பவர் கடத்தி சென்றுள்ளார். எனவே எனது மகளை மீட்டு கடத்திச்சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த புகார் மனுவில்  கூறியிருந்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திச் சென்ற ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT