சுபின் 
செய்திகள்

தெப்பக்குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு

தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பத்மநாபபுரம்:

தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சுபின் நண்பர்களுடன் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள நீலகண்டசாமி கோவில் தெப்பகுளத்துக்கு குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சுபின் மாயமானார். இதைகண்ட சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுபின் உடல் சிக்கியது. அப்போது சுபின், குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து சுபினின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT