செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 12-ந் தேதி வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 12-ந் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில், உயிரி- விலங்கியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களில் பி-வகை வினா எண் 16 மற்றும் ஏ-வகை வினா எண் 14 ஆகியவற்றுக்கு, அவ்வினாக்களை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று இரு தேர்வர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், மேற்குறிப்பிட்ட வினாவுக்கு விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். மதிப்பீட்டுப் பணி நிறைவுற்று இருப்பின் மறுகணக்கீடு செய்து மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த 28-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.


அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேற்குறிப்பிட்ட தீர்ப்பாணைக்கு நேற்று தடையாணை வழங்கி உள்ளது.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.