செய்திகள்

வாணியம்பாடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-1 மாணவன் தற்கொலை

வாணியம்பாடி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

வாணியம்பாடி:

குடியாத்தம் டவுன் பகுதியை சேர்ந்தவர் பாபு. கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்துரு (வயது 16). வாணியம்பாடி அடுத்த அம்பலூரில் உள்ள பாட்டி வளர்மதி வீட்டில் தங்கி அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில், சந்துரு படிப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த மாணவன், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

அம்பலூர் பாலாற்றின் கரையோரத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை கிணற்றில் மாணவன் பிணமாக கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, அம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.