செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற வாய்ப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டவிதிக்கு எதிரான மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்று கருதுபவர்களுக்கு வேலை மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் `35ஏ சட்டவிதி` சிறப்பு சலுகையை அளிக்கிறது. மேலும் வெளிநபர்கள் நிலம் மற்றும் வீடுகளை வாங்குவதையும் அது தடுக்கிறது. 1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஜூலை மாதம் மத்திய அரசு இது தொடர்பாக விவாதத்தை கிளப்பியதிலிருந்து காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் கவலை தெரிவித்துள்ளனர். சட்ட விதி 370ன் படி மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் ஒரு நடவடிக்கையாக அவர்கள் இதனை கருதுகின்றனர்.

35ஏ சட்டவிதியை ரத்து செய்யக் கோரிய சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நிராகரிக்கக் கோரி காஷ்மீர் மாநில அரசும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய முன்பு இன்று  நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருவதாக வாதிடப்பட்டது.

இதனையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக இருக்காமால் இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும்,  35ஏ சட்டவிதிக்கு எதிரான மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் முடிவு செய்யும் என்று கூறினார். 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இம்மாத இறுதியில் இது குறித்தி விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.