செய்திகள்

குனியமுத்தூரில் பிளாஸ்டிக் குடோன்- ஷோபா கடையில் தீ விபத்து

கோவை குனியமுத்தூரில் நள்ளிரவில் பிளாஸ்டிக் குடோன் மற்றும் ஷோபா கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

கோவை:

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் முகமது ஷாஜூ (வயது 42). இவர் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனை ஒட்டி தெற்கு உக்கடத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்(37) என்பவருக்கு சொந்தமான ஷோபா கடை உள்ளது.

நள்ளிரவு 2 மணி அளவில் பிளாஸ்டிக் கடையில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகே உள்ள ஷோபா கடைக்கும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசாருக்கும், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். கூடுதலாக 2 வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

சுமார் 4 மணி நேரம் வீரர்கள் போராடி காலை 6 மணிக்கு தீயை முற்றிலுமாக அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட் கள் எரிந்து நாசமானது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.