செய்திகள்

போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது: 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

மாலை மலர்

விருதுநகர்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தது. அதன்படி கடந்த மே மாதம் போலீஸ் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் உடற்கூறு அளத்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது. ரெயில்வே ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், சென்னை சிறப்பு போலீஸ் படை டி.ஐ.ஜி. தினேஷ்தோமர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோர் கண்காணிப்பில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் 4,088 பேர் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர். இதற்காக தேர்வு நடைபெறும் பள்ளி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.