அகமதாபாத்:
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அகோரா மால் என்ற பகுதியில் இன்று மாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுப்பதற்காக அங்குள்ள பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தனியார் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பாதுகாவலர்கள் புகைப்பட நிருபர்களை தாக்கியுள்ளனர்.
தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் வைத்திருந்த கேமரா, செல்போன்களை பறித்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் பெங்களூரில் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொல்லப்பட்டதும், பீகாரில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.