செய்திகள்

அதிபரின் பிரசாரத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சி

பிலிப்பைன்ஸ் அதிபரின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. #PhilippinePresident #Cockroach

மணிலா:

பிலிப்பைன்சில் வருகிற 13-ந் தேதி பொது தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், போஹால் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.

இதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, அதிபரின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ துதர்தே, தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டிவிட்டுவிட்டு, ‘இது எதிர்கட்சியின் சதி’ என நகைச்சுவையாக கூறி, பேச்சை தொடர்ந்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

SCROLL FOR NEXT