நடுவானில் விமானத்தில் தீப்பிடித்த காட்சி. 
செய்திகள்

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீ- பயணிகள் அலறல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிலிப்பைன்ஸ்க்கு புறப்பட்ட விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 342 பயணிகளும், ஊழியர்கள் 18 பேரும் இருந்தனர். புறப்பட்ட 15 நிமிடத்துக்குள் விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது. இதை கண்ட பயணிகள் பயத்தில் அலறினர். இதனால் விமானத்துக்குள் பதற்றமும், பீதியும் உருவானது.

இதையடுத்து விமானத்தை மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விமான நிலையத்தில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை தயாராக நிறுத்தப்பட்டன. தீப்பிடித்த அந்த விமானம் வேகமாக விமான நிலையத்துக்கு திரும்பி தரையிறங்கியது. தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். என்ஜினில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இதற்கிடையில் தீப்பிடித்த நிலையில் விமானம் தரையிறங்கியதை பலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.