கோப்புபடம் 
செய்திகள்

கருணை கொலைக்கு அனுமதி கேட்டு கையை இழந்த பெண் தொழிலாளி கலெக்டரிடம் மனு

கருணை கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என கையை இழந்த பெண் தொழிலாளி, கலெக்டர் கோவிந்தராவிடம் மனு அளித்தார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி ரேவதி. இவர் பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி குப்பைகள் தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் ரேவதியின் வலது கை சிக்கியதால் முழங்கை வரை துண்டிக்கப்பட்டு, ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகிவிட்டார். ஆனால் துண்டித்த பகுதியை ஒட்ட வைக்க முடியாததால் ஒரு கையை அவர் இழந்துவிட்டார். இவர் கருணை அடிப்படையில் தனது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் தன்னையும், தன் குடும்பத்ை-தையும் கருணை கொலை செய்ய வேண்டும் என மனு அளிப்பதற்காக தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.

பின்னர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதா.சிவக்குமார் தலைமையில் ரேவதி உள்ளிட்ட சிலர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ரேவதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கை துண்டானதால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். எனது மகளுக்கு அரசு வேலை வழங்கி எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கொரோனா பேரிடர் பணியில் விபத்து ஏற்பட்டாலோ, மரணம் அடைய நேரிட்டாலோ ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பேரிடர் நிதி இதுநாள் வரை கிடைக்கவில்லை.

எனக்கு திவ்யா, அபிநயா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வறுமையும், பசி கொடுமையும் என்னை வாட்டியதால் ஒப்பந்த தொழிலாளியாக பணியில் சேர்ந்தேன். எங்கள் குடும்ப சூழ்நிலையை கருதி கருணை அடிப்படையில் நிதிஉதவி வழங்குவதுடன் எனது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தோடு மரணம் அடைய தூக்கு கயிறு வழங்கி கருணை கொலைக்கு அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.