தலைமை நீதிபதி தஹில் ரமானி 
செய்திகள்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக மனு தாக்கல்

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். 

மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி தன் பதவியை கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதன் பின்னர் கடந்த 9-ந் தேதி முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் செயலகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என அறிவிக்கப்படும் என்றனர்.