செய்திகள்

பெருங்குடியில் 2½ வயது ஆண்குழந்தை கடத்தல்

பெருங்குடி அருகே 2½ வயது ஆண்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சோழிங்கநல்லூர்:

பெருங்குடியை அடுத்த கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் குருசாமி. இவரது மனைவி பிரேமலதா. இவர்களது 2 ½ வயது மகன் விஷ்வா.

நேற்று மாலை பிரேமலதா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் விஷ்வா வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டு இருந்தான்.

திடீரென விஷ்வாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. விஷ்வாவை மர்ம நபர்கள் கடத்தி சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து துரைபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சிறுவனை கடத்தி சென்றது யார்? என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.