செய்திகள்

பெருங்குடியில் கடத்தப்பட்ட சிறுவனின் கதி என்ன?: கேமிராவில் கடத்தல்காரன் உருவம் பதிவு

பெருங்குடியில் கடத்தப்பட்ட சிறுவன் குறித்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

பெருங்குடியை அடுத்த கல்லுகுட்டை பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது 3 வயது மகன் விஸ்வா.

கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விஸ்வா திடீரென மாயமானான். அவன் கடத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை சிறுவன் விஸ்வா பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அவன் என்ன ஆனான் என்பது தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் தரமணி பஸ்நிலையத்தில் ஒரு கடையில் வைத்துள்ள கண்காணிப்பு காமிராவில் சிறுவன் விஸ்வாவை மர்மவாலிபர் கடத்தி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

அதில் சிறுவனுடன் வாலிபர் ஒருவர் நிற்பதும் பின்னர் தரமணி வழியாக வேளச்சேரி செல்லும் பஸ்சில் ஏறிச் செல்வதும் பதிவாகி இருக்கிறது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை குருசாமி கூறும்போது, ‘‘மகன் விஸ்வா கடத்தப்பட்டு 15 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT