கரூர்:
கரூர் அருகே உள்ள தட்டாளப்பட்டி பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான ரெயில் தண்டவாள டிராக் அமைந்துள்ளது. இன்று காலை அந்த ரெயில் தண்டவாளத்தில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கரூர் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்த வாலிபரை உடலை கைப்பற்றினர். அந்த வாலிபரின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவரின் கை, கால், மார்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. எனவே யாரோ மர்ம நபர்கள் அந்த வாலிபரை கடத்தி வந்து சம்பவ இடத்தில் வைத்து கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேதிக்கிறார்கள். அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையுண்ட வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் அணிந்திருந்த சட்டை காலரில் கரூரில் உள்ள டெய்லர் கடையின் முகவரி இருந்தது. எனவே அவர் கரூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வாலிபராக இருப்பதால் பெண் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பசுபதிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.