சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் 18-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.
அப்போது கவர்னருக்கு விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.
விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்று பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் பட்டமளிப்பு விழாவுரை நிகழ்த்தினார். இதில் கலெக்டர் ரோகிணி மற்றும் பதிவாளர் பேராசிரியர் கு.தங்கவேல் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.