அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
தமிழகத்தில் எந்த வடிவத்திலும் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை. அதனால்தான் இந்த மாதிரி உணர்வுகளை தூண்டி வன்முறைகளை அரங்கேற்றி அரசியல் பண்ண நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் சிறு சிறு சாதி, மத மோதல் எப்போதாவது ஏற்பட்டாலும் அமைதியாகவே உள்ளது. ஆனால் எச்.ராஜா போன்றவர்கள் இந்த மாதிரி வார்த்தைகளை விட்டு வன்முறை அரசியலை தூண்டி விடுகிறார்கள்.
பெரியாரை பற்றி இன்னும் நூறு ஜென்மம் எடுத்தாலும் பா.ஜனதாவினருக்கு புரியாது. சாதி, மதம், தாழ்த்தப்பட்டவர்கள், மேலோர், கீழோர் என்று எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லாத சமுதாயத்துக்காக பாடுபட்டவர். பெண் அடிமையை எதிர்த்தவர்.
இவை எல்லாம் அறியாதவர்களா, தெரியாதவர்களாகத்தான் பா.ஜனதாவினர் இருக்கிறார்கள். எச்.ராஜா பெரியாரை பற்றி புரியாதவர். மத வெறியில் பேசுகிறார்.
இது பா.ஜனதாவின் கருத்து இல்லை என்றால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.
எப்படியாவது கலவரத்தை உருவாக்க கங்கணம் கட்டி அலைகிறார்கள். ஆனால் தமிழ் மண் பெரியார் மண். அவர் சொல்லிக் கொடுத்த பாதையில் செல்கிறோம். மத, சாதி அரசியலுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது.