செய்திகள்

பெரியபட்டினத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

பெரியபட்டினத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாலை மலர்

கீழக்கரை:

பெரியபட்டினம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. உதவி பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம் தலைமை தாங்கினார். பெரியபட்டினம் ஊராட்சி செயலர் ஜலால் முன்னிலை வகித்தார்.

பெரியபட்டினம் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா கிராமமாக உருவாக்குவது எனவும், கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசு மானியத்தில் கழிப்பறை கட்டி கொடுக்கப்பட வேண்டும்.

ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு தற்போது அதிகமாக இருப்பதால் ஆழ்துளைக் கிணறு அமைத்து குளங்களை நிரப்பி பொதுமக்கள் குளிப்பதற்கு வசதி செய்து தர வேண்டும்.

மேலும் அந்த ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீருக்கு பயன்படுத்தி கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியபட்டினம் கிராமத்தை விவசாய நல்வாழ்வு இயக்க கிராமமாக தேர்வு செய்தமைக்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திவ்ய பாரதி, கல்வி வளர்ச்சி அலுவலர் நூர்ஜஹான், வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் சிவபால நாதன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் பைரோஸ் கான், நகர் செயலாளர் முகம்மது ஆசிக், சேகு ஜலாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.