செய்திகள்

பெரிய நாயக்கன்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு அசாம் வாலிபர் மரணம்

பெரிய நாயக்கன்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு அசாம் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கோவை:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலி அக்பர் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவர் கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அலி அக்பர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இன்று அதிகாலை அறையில் படுத்து இருந்த அலிஅக்பர் காய்ச்சல் அதிகமாகி மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அலிஅக்பரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.