செய்திகள்

பெரியகுளம் அருகே சுவரில் துளைபோட்டு டாஸ்மாக் கடையில் பணம்-மதுபாட்டில்கள் கொள்ளை

பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி:

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றனர்.

நள்ளிரவு சமயத்தில் வாலிபர் ஒருவர் கடையின் பின்பக்கம் இருந்த சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்த பணம் ரூ.6,800 மற்றும் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார்.

மறுநாள் காலை விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தபோது பின்னால் சுவரில் துளை போட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் காமக்காபட்டியை சேர்ந்த ஞானசேகரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஞானசேகரனிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT