பெரம்பலூர்:
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கோட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பின் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் கோட்ட செயலாளர் சி.சுப்ரமணியன் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலைப்பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்திடும் வகையில் தரமான முககவசம், கையுறை, கிருமி நாசினி திரவம், சோப்பு உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 ஆண்டுகள் ஒரே நிறுவனம் பராமரிக்க வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சங்கத்தின் மாநில செயலாளர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். இதையடுத்து சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பின் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். முன்னதாக கோட்ட துணை தலைவர் பழனிசாமி வரவேற்றார். முடிவில் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.