செய்திகள்

திண்டுக்கல்லில் ரெயிலை மறிக்க முயன்ற பொதுமக்கள்

திண்டுக்கல்லில் பொதுமக்கள் ரெயிலை மறிக்க சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழனி, கரூர், சென்னை ஆகிய 3 ரெயில் வழித்தடங்கள் இவ்வழியே செல்கிறது. தற்போது பாலம் வேலை நடைபெறுவதால் முதலாவது கேட் முழுவதுமாக மூடப்பட்டது.

இதனால் செங்குறிச்சி, பாலகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் 2 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் புதர்மண்டி காணப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிலர் ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை மறிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு மற்றும் நகர் வடக்கு போலீசார் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews

SCROLL FOR NEXT